3 Jan 2017

சாவித்ரிபாய் புலே

சாவித்ரிபாய் புலேக்கு சிறப்பு செய்த கூகுள்
3/1/2017

     சமூக ஆர்வலர், கவிஞர், பெண்ணியவாதி என பன்முக தன்மை கொண்ட சாவித்ரிபாய் புலே, 1831-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள நைகான் எனும் கிராமத்தில் பிறந்தார். 9-வது வயதில் திருமண பந்தத்தில் நுழைந்த சாவித்ரி, தனது கணவரிடம் இருந்து எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

      பின்னாட்களில் தனது கணவருடன் இணைந்து இந்தியாவில் பெண்களுக்கு நடந்து வந்த கொடுமைகளை எதிர்த்து போராடினார். பெண் கல்வி, பெண் சமத்துவம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட பெண்கள் நலன் மற்றும் குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல் எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் செய்து வந்தார்.

           இந்தியாவின் நவீன கால பெண்ணியவாதிகளுக்கு முன்னோடியாக அறியப்படும் சாவித்ரி இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை துவங்கியவர் மற்றும் முதல் இந்திய பெண் ஆசிரியர் என்ற பெருமைக்கும் உரியவராவார். 9 மாணவிகளுடன் ஆரம்பித்த இவரது பள்ளி பின்னர் 18 மேற்பட்ட இடங்களில் கிளை பரப்பியது.
   
       பெண் வீட்டை விட்டு வெளியே செல்வதை குற்றமாக கருதிய அந்த காலத்தில் இவர் பள்ளிக்கு செல்லும் போது பெண்கள் இவர் மீது மலம் போன்றவற்றை வீசி தொல்லைக் கொடுத்துள்ளனர். அனைத்தையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.

  பெண் கல்விக்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டும் விதமாக 2014-ம் ஆண்டு புனே பல்கலைக்கழகத்தின் பெயரை சாவித்ரிபாய் புலே என மாற்றி வைத்தனர்.

    1897-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் நாள் இவர் இயற்கை எய்தினார்.

      சாவித்ரிபாயின் 186-வது பிறந்தநாளான இன்று அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் கூகுள் சிறப்பு டூடில் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் பலர் ஒரு கட்டிடம் முன்பு நிற்பது போன்றும் அவர்களை சாவித்ரி தனது சேலை தலைப்பால் அரவணைப்பது போன்றும் இது உருவாக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment