30 Jan 2017

திருப்பூர் குமரன் (எ) கொடிகாத்த குமரன் :
11/1/2017

சுதந்திர போராட்ட வீரர்கள் என்றதும் நம் நினைவுக்கு வரும் சிலரில் கொடி காத்த குமரனும் ஒருவர். இவரது இயற்பெயர் 'குமாரசாமி'. 1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் நாள் ஈரோடு அடுத்த சென்னிமலையில், நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். குடும்ப ஏழ்மையின் காரணமாக தனது பள்ளி வாழ்க்கையை 5ம் வகுப்பு வரையே தொடர முடிந்தது. 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். குமாரசாமியின் குடும்பம் தறி நெசவு தொழிலை பூர்விகமாக கொண்டது. தொழிலில் போதிய வருமானம் இல்லாமையால் இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக பற்று கொண்ட குமரன், காந்தி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். நாட்டுப்பற்று கொண்ட குமாரசாமி திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். மகாத்மா காந்தியின் கதர் இயக்கம் திருப்பூரில் தான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்துகொண்டு, தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிரஸ் தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார். 1932இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932 ல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவானது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் ஊர்வல ஏற்பாடுகளைச் செய்தனர். தியாகி 'பி.எஸ்.சுந்தரம்' தலைமையில் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு இந்த ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது; ரத்தம் பீரிட்டது. அவர் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை. வாய், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகியின் உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும், அவர் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை. நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். மரண அடிபட்ட குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தான் பிரிந்தது. அந்த வீரத் திருமகனின் உடல், யாரோ சிலரால் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. இந்தத் தமிழனின் வீரம் புதைக்கப்பட்டாலும், வரலாறு பேசிக்கொண்டே தான் இருக்கும்.

No comments:

Post a Comment