தமிழ் இலக்கணம் - சொல் வகை
சொல் வகை
தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை வருமாறு:
1) பெயர்ச்சொல்
2) வினைச்சொல்
3) இடைச்சொல்
4) உரிச்சொல்
(எடு.)
மலை - பெயர்ச்சொல்
சென்றான் - வினைச்சொல்
ஐ - இடைச்சொல்
மா - உரிச்சொல்
சொற்களை இயல்பும் இடமும் நோக்கி வேறு நான்கு வகையாகப் பிரிப்பர். அவை வருமாறு:
1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்
இயற்சொல்:
இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நிலத்தில் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்றுதொட்டு வழங்கிவரும் சொல்லாகும்.
(எ.டு.) மரம், வந்தான்
செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
(நன்னூல்:271)
திரிசொல்:
திரிசொல் என்பது கற்றவர் மட்டுமே பொருள் உணரக்கூடியது. இஃது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும்.
(எ.டு)
கிள்ளை, தத்தை, சுகம் -
கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொல்.
வாரணம் -
யானை, கோழி, சங்கு முதலிய பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.
ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும்
பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் ஆகும் (நன்னூல் : 272)
திசைச்சொல்:
திசைச்சொல் என்பது செந்தமிழ் வழங்கும் நிலம் தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும் சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம் கருத்தைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.
(எடு.)
சிறுகுளம் - இதனைப் ‘பாழி’ என்பர் பூழிநாட்டார்; ‘கேணி’ என்பர் அருவாநாட்டார்.
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப
(நன்னூல் : 273)
வடசொல்:
வடசொல் என்பது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உரிய பொது எழுத்தாலும், சிறப்பெழுத்தாலும் இவ்விருமொழிகளுக்கும் உரிய எழுத்தாலும் வழங்கப்படும் சொல்லாகும். இது தமிழ்ச்சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை மொழியான ஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாகும்.
(எடு.)
காரியம், காரணம் - பொது எழுத்தால் அமைந்தன.
போகி, சுத்தி - சிறப்பெழுத்தால் அமைந்தன.
கடினம், சலம் - இருவகை எழுத்தாலும் அமைந்தன.
பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானும் இயைவன வடசொல்
(நன்னூல் : 274)
No comments:
Post a Comment