29 Nov 2016

எது பிழை? எது சரி ?

1. கிருட்டிணன் - கிருட்டினன்
கிருஷ்ணன் என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் கிருட்டினன் என்று எழுதுவதே மரபு. கர்ணன் என்பது தமிழில் கன்னன் என்றே வரும். க்ருஷ்ணவேணி என்பது கிருட்ணவேணி என்று எழுதப்படும்.

2. சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே
சுவர் + இல் = சுவரில் - சுவரில் எழுதாதே என்பதே சரியான தொடர். சுவற்றில் என்று எழுதினால் வரண்டு போன இடத்தில் என்பது பொருளாகும்.

3. ஒரு ஆடு - ஓர் ஆடு
ஒன்று என்பது ஒரு எனத் திரிந்துள்ளது. ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்று எழுதுவதே வழாநிலையாம்.

4. ஓர் அரசன் - அரசன் ஒருவன்
ஒரு என்ற சொல் உயிரெழுத்துகளுக்கு முன்னும், யகர ஆகாரத்தின் முன்னும் ஓர் என்று ஆகும் என மேலே கண்டோம். ஆனால் உயர்திணைப் பெயர்களுக்கு முன்னே எண் பெயர் வாராது. ஓர் அரசன் என்று எழுதுவது தவறு. அரசன் ஒருவன் என்று எழுதுவதே சரியாகும். இதுபோலவே அரசர் பலர் என்று வரும்.
5. கடை அருகாமையில் இருக்கிறது - கடை அருகில் இருக்கிறது
கடை அருகில் இருக்கிறது என்பதே சரி.

6. பொம்மை செய்ய முயற்சித்தான் - பொம்மை செய்ய முயன்றான்
முயற்சித்தல் என்ற வினைச் சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுவதே சரியாகும்.

7. அலமேல் மங்கை - அலர் மேல் மங்கை
அலர் மேல் மங்கை என்பதே சரியாகும். அலர் என்றால் பூ. பூவின்மேல் அமர்ந்திருக்கின்ற மங்கை.

8. நாட்கள் - நாள்கள்
கால்கள் என்ற சொல்லைக் காற்கள் என்று எழுதுவதில்லை. எனவே நாட்கள், நூற்கள், தொழிற்கள் ஆகிய சொற்களை நாள்கள், நூல்கள், தொழில்கள் என்றே எழுதுக.

9. எந்தன் - என்றன்
என்றன் என்பதே சரி. என் தன் என்றன் என்றே வரும் ( என்- ஒருமை, தன்- ஒருமை) (எம் - பன்மை, தம் - பன்மை) எம் தம் எந்தம் என்றே வரும் ( எம் - பன்மை, தன் - ஒருமை - எந்தன்) இது தவறான புணர்ச்சியாகும்.

10. சாற்றுக்கவி - சாற்றுகவி
சாற்றுக்கவி என்று "க்" மிகுந்து எழுதுதல் தவறாகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும். ஆனால், சாற்றுக்கவி என்பது வினைத்தொகையாகும். வினைத் தொகையின் முன் வல்லினம் மிகா.

11. வறுமைகளை ஒழிப்போம் - வறுமையை ஒழிப்போம்
வறுமை என்பதற்குப் பன்மை கிடையாது. அதுபோலப் புல், நீர், தாகம் ஆகியவற்றுக்கும் பன்மை கிடையாது. ஆடுகள் புற்களை மேய்ந்தன என்பது தவறாகும். ஆடு புல்லை மேய்ந்தன என்பதே சரியாகும். பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு. பல ஆறுகளின் நீர்க் குடித்தேன் என்பதே சரி. நண்பர்களின் தாகங்களை நீக்கினேன் என்பது தவறாகும். நண்பர்களின் தாகத்தை நீக்கினேன் என்பதே சரியாகும்.

12. மனதை - மனத்தை
மனம் ஐ மனத்தை என்றே வரும். பணம் ஐ பணத்தை என்றே வரும். பணதை என்று வருமா? தனம், வனம், சினம், கனம், இனம், பிணம் ஆகிய சொற்களுடன் ஐ சேரத் தனத்தை, வனத்தை, சினத்தை, கனத்தை, இனத்தை, பிணத்தை என்றே எழுதுதல் வேண்டும்.
13. திருநிறைச் செல்வன் - திருநிறை செல்வன்
திருநிறைச் செல்வன் என்று வல்லினம் மிகுந்து வருதல் தவறாகும். திருநிறை செல்வன் என்பது வினைத்தொகை. வினைத் தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறை செல்வன், திருவளர் செல்வி, திருவளர் செல்வன் என்று வல்லினம் மிகாமல் எழுதுக.

14. புள்ளாங்குழல் - புல்லாங்குழல்
புள்ளாங்குழல் என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் என்று பொருள். எனவே மூங்கில் குழாயிலிருந்து உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை)

15. கலை கழகம் - கலைக்கழகம்
கலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருள்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுந்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருள்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

No comments:

Post a Comment